தவறான செல்போன் அழைப்பு மூலம் அறிமுகமாகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


தவறான செல்போன் அழைப்பு மூலம் அறிமுகமாகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 9:01 PM GMT (Updated: 7 July 2021 9:01 PM GMT)

ஈரோட்டில் தவறான செல்போன் அழைப்பு மூலம் அறிமுகமாகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் தவறான செல்போன் அழைப்பு மூலம் அறிமுகமாகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவி கடத்தல்
ஈரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த மாதம் 30-ந் தேதி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
இதைத்தொடர்ந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு ‘ராங்கால்’ மூலமாக அறிமுகமான ஒரு வாலிபர் திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
தவறான செல்போன் அழைப்பு
பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதேவி ஏரிகரையை சேர்ந்தவர் சஞ்சீவி. இவருடைய மகன் வேல்முருகன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பருக்கு செல்போனில் அழைத்தபோது, ஈரோட்டை சேர்ந்த மாணவிக்கு தவறாக செல்போன் அழைப்பு சென்றது. அப்போது செல்போன் அழைப்பை ஏற்று பேசிய அந்த மாணவி, நீங்கள் கேட்கும் நபர் யாருமில்லை என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு மீண்டும், மீண்டும் அந்த மாணவிக்கு வேல்முருகன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பழகியுள்ளார்.
இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை வேல்முருகன் கடத்தி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோ சட்டம்
இந்தநிலையில் பெரம்பலூர் விரைந்த போலீசார், அங்கு வேல்முருகனை கைது செய்து மாணவியையும் மீட்டனர். மேலும், வேல்முருகனிடம் நடத்திய விசாரணையில் அவர் மாணவியை ஈரோட்டில் இருந்து கரூருக்கு கடத்தி சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், பிறகு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Next Story