பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்


பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
x
தினத்தந்தி 8 July 2021 4:11 AM GMT (Updated: 8 July 2021 4:11 AM GMT)

பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 50 சதவீதம் இருக்கை வசதிகளுடன் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் இன்று (வியாழக்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 6.30 மணிக்கு பதிலாக 1 மணி நேரத்துக்கு முன்பாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரெயில் சேவைகள் நெரிசல் மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தலா ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

முககவசம் அணியாமலும், முறையாக அணியாமலும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்த 34 பேரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பயணிகளை கண்காணிக்க தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story