சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்-பொருட்கள் எரிந்து சேதம்


சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்-பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 8 July 2021 10:42 PM GMT (Updated: 8 July 2021 10:42 PM GMT)

சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

சென்னிமலை
சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
வாடகை குடோன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் சென்னிமலையை அடுத்து உள்ள ஈங்கூர் வெள்ளியங்காடு என்ற பகுதியில் வாடகைக்கு குடோன் எடுத்து  பஞ்சு மில்  நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பஞ்சு மில்லில் வழக்கம்போல் நூல் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு எந்திரத்தில் இருந்து தீப்பொறி வெளியேறி அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றிக் கொண்டது. இதனைப்பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள மளவென பரவியது. 
லட்சக்கணக்கான பொருட்கள்
பின்னர் இதுபற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள். ஆனால் இந்த தீ விபத்தில் பஞ்சு அரவை எந்திரங்கள் மற்றும் பஞ்சு பொதிகள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story