வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த போலி அரசு அதிகாரி கடத்தல்


வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த போலி அரசு அதிகாரி கடத்தல்
x
தினத்தந்தி 9 July 2021 5:22 AM GMT (Updated: 9 July 2021 5:22 AM GMT)

வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி அரசு அதிகாரியை காரில் கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். போலி அரசு அதிகாரி பத்திரமாக மீட்கப்பட்டார்.

சென்னை,

சென்னை வடபழனி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 49). இவர், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆடிட்டராக வேலை செய்வதாக கூறி வந்துள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் ரூ.83 லட்சம் வரை பணம் வாங்கி, ராஜா மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜா உண்மையில், தலைமைச்செயலகத்தில் வேலை எதுவும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. போலி அரசு அதிகாரியாக வலம் வந்து அவர் பலரை மோசடி வலையில் விழ வைத்துள்ளது அம்பலமானது.

இதனால் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கோபம் கொண்டனர். அவரை கடத்திச்சென்று பணத்தை மீட்க முடிவு செய்தனர். ராஜாவிடம் அன்பாக பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

கடந்த 6-ந்தேதி அன்று இரவு எழும்பூர் கென்னட் லைனில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ராஜா அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார். திடீரென்று ராஜாவை ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர். இது தொடர்பாக எழும்பூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

மீட்பு-கைது

இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில், எழும்பூர் உதவி கமிஷனர் ராகவன், இன்ஸ்பெக்டர் ரஞ்சித், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் 6-ந்தேதி இரவோடு இரவாக களத்தில் இறக்கப்பட்டனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

7-ந்தேதி அன்று ராஜா செல்போனில் போலீசாரிடம் பேசினார். பின்னர் ராஜாவை கடத்திச்சென்றவர்களிடமும் போலீசார் பேசினார்கள். எங்களுக்கு தர வேண்டிய ரூ.83 லட்சம் பணத்தையும் வாங்கி கொடுத்தால், ராஜாவை பத்திரமாக விட்டுவிடுவதாக தெரிவித்தனர்.

பணத்தை வாங்கி தருவதாக போலீசார் வாக்குறுதி கொடுத்தனர். கடத்தல்காரர்கள் பேசிய ராஜாவின் செல்போன் நம்பரை வைத்து கடத்தல்காரர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர். அவர்கள் காரில் எழும்பூர் பகுதிக்கு வந்தனர். அவர்களை கண்காணித்த போலீஸ் படையினர் மடக்கி பிடித்தனர். ராஜா பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்திய 6 பேர் கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கார் பறிமுதல்

6 பேர் பெயர் விவரம் வருமாறு:-1.ராமமூர்த்தி (52). திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், 2. குமார் (42), கடலூர் மாவட்டம், வேட்டக்குடி. 3.சுதர்சன் (35, கடலூர் மாவட்டம், பாண்டூர்.

4.கிள்ளிவளவன் (31), கடலூர் மாவட்டம், திருவிதாசை. 5.சிவபாலன் (41), கடலூர் மாவட்டம், சிதம்பரம். 6.அலெக்ஸ் (23), விழுப்புரம் மாவட்டம், நியூகாலனி. இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.83 லட்சம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜா மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story