உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையால் சேதம்


உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையால் சேதம்
x
தினத்தந்தி 9 July 2021 6:04 AM GMT (Updated: 9 July 2021 6:04 AM GMT)

உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைந்தது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் ரெட்டமங்கலம் கிராமத்தில் அரசு நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

இங்கு சேமித்து வைக்கப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திறந்த வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய இந்த மூட்டைகள் உடனுக்குடன் ஏற்றுமதி செய்யாத காரணத்தால் மாதக்கணக்கில் திறந்த வெளியிலேயே தேங்கி கிடக்கிறது. நெல் மூட்டைகளை மழையின்போது பாதுகாக்க போதுமான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மழையால் சேதம்

நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்த மழையால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story