தனியார் நிறுவன பஸ்கள் மோதல்; 10 பெண்கள் காயம்


தனியார் நிறுவன பஸ்கள் மோதல்; 10 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 10 July 2021 2:09 AM GMT (Updated: 10 July 2021 2:09 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன பஸ்கள் மோதிய விபத்தில் 10 பெண்கள் காயம் அடைந்தனர்.

சென்னை, 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றது.

2 பஸ்களிலும் 40 பெண் ஊழியர்கள் பயணம் செய்தனர். சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதற்காக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.

அப்போது பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துகுள்ளாகி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10 பெண்கள் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story