நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகாித்துள்ளது.
பவானிசாகர்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை
இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,036 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 93.39 அடியாக இருந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலமாக குடிநீருக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 83 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 93.48 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 550 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






