ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி


ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி
x
தினத்தந்தி 12 July 2021 6:13 AM GMT (Updated: 12 July 2021 6:13 AM GMT)

தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை தலைவர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் அறிவுறுத்தலின் பேரில் குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கடந்த 28-ந் தேதி அன்று திருவள்ளூரை அடுத்த ஏளாவூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 3,550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடர் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் வீரமணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

மற்றொருவரும் கைது
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா பட்டாபிராமபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த சற்குணன் (32) என்பவர் போதை பொருட்களை கடத்தியது உள்ளிட்ட பலவித குற்ற வழக்குகளுக்காக சிறை சென்றவர்.இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் சற்குணத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story