அரசு ஊழியர்களுக்கு பரிசு


அரசு ஊழியர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 12 July 2021 6:05 PM GMT (Updated: 12 July 2021 6:05 PM GMT)

தமிழ்மொழியில் அலுவலக குறிப்புகளை பராமரித்த அரசு ஊழியர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்மொழியில் வரைவுகள், குறிப்புகள், பராமரிக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 2019-ஆண்டு ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தின் மூலம் அரசு அலுவலகங்களில் சிறந்த முறையில் வரைவுகள், குறிப்புகள் எழுதி பராமரித்தமைக்காக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி வருவாய் அலுவலர் பூங்கோதைக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையும், சிவகங்கையில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் ஆஷாபானுவுக்கு, 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையும், பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் ஹபீப் ராசாவுக்கு, 3-ம் பரிசாக ரூ.1,000-க்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார்.
அதேபோல் சார்நிலை அலுவலகங்கள் சார்பாக சாக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மரியாளுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையும், தன்னாட்சி நிலைய அலுவலகங்கள் சார்பாக சிவகங்கை. உதவி மின்பொறியாளர் அலுவலக வணிக ஆய்வாளர் செல்வக்குமாருக்கு ரூ.1,000-க்கான காசோலையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் வெண்ணிலா, சிராஜ்தீன், முனியசாமி, கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story