மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீர்த்து கட்டிய ஆசிரியர் கைது


மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீர்த்து கட்டிய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 6:06 AM GMT (Updated: 14 July 2021 6:06 AM GMT)

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பேராசிரியையை கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

காஞ்சீபுரம் நகர் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 45). திருமணமாகாதவர். காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 9-ந்தேதி தான் வசித்து வந்த வீட்டின் முதல் தளத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

சந்தேகத்தின் பேரில், காஞ்சீபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சுதாகர் (42) என்பவரை போலீசார் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் நிலையத்தில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியப்பிரியாவும் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது,

உயிரிழந்த பேராசிரியை அனிதாவும், உடற்கல்வி ஆசிரியர் சுதாகரும் காஞ்சீபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும் போது பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில், தன்னை திருமணம் செய்ய சுதாகரை அனிதா வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனால் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக கொலைவெறி தாக்குதலில் அவர் பலியானார். இதையடுத்து சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து சுதாகர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்த போலீசார், காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story