என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள்: வைகோ வாழ்த்து


என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள்: வைகோ வாழ்த்து
x
தினத்தந்தி 15 July 2021 2:07 PM GMT (Updated: 15 July 2021 2:07 PM GMT)

என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள்: வைகோ வாழ்த்து.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பொதுவுடைமைப் பூங்காவில் பூத்த புரட்சி மலர் என். சங்கரய்யா, இன்று (வியாழக்கிழமை) நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். தன் வாழ்வையே போராட்டக் கள வேள்வியாக ஆக்கிக்கொண்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் தடம் பதித்த ‘இரும்பு மனிதர்’ சங்கரய்யா. அவர் நூற்றாண்டின் நுழைவாயிலில் இருப்பது நம்மை பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.

இந்திய பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டு 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மலர்ந்தபோது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா; மற்றொருவர் அச்சுதானந்தன். வாழும் பொதுவுடைமைப் புரட்சியாளர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கடந்தும் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டுகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story