விபத்துகளை குறைக்க இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது அமைச்சர் பேட்டி


விபத்துகளை குறைக்க இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2021 5:16 PM GMT (Updated: 15 July 2021 5:16 PM GMT)

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சாலைகளை விரிவுபடுத்த வனத்துறையின் அனுமதியும் தேவைப்படுவதால் இதற்கென ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். சாலைகள் அமைக்க நில எடுப்பும் தாமதமாகிறது.

காலதாமதத்தை தவிர்க்க அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைத்தால் விரைவாக சாலைகளை அமைக்க முடியும். அதிகமாக விபத்துக்கள் நடக்கும் இடங்கள் குறித்து போலீஸ் துறையினரிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்

ஒரே இடத்தில் 5 விபத்துக்களுக்கு மேல் நடந்திருந்தால் அந்த இடத்தை விபத்து பகுதியாக அறிவித்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மற்றும் போலீசார் இணைந்த ஒருங்கிணைப்புக்குழுவும் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் பல இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. ரெயில்வே இருப்பு பாதைக்கு மேலாக போடப்படும் இணைப்பு மேம்பால பணிகள் ரெயில்வேத்துறையினரால் விரைவாக முடிக்கப்படாமல் பல பாலங்கள் கிடப்பில் இருந்து வருகிறது. இந்த பணியை விரைவுபடுத்தவும் ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

சுற்றுலா மாளிகை

10 ஆயிரம் கி.மீ. சாலைகள் 5 ஆண்டுகளுக்குள் நபார்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளது. திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் சுற்றுலா மாளிகையும், காஞ்சீபுரத்தில் சுரங்கப்பாதை கட்டவும் பரிசீலனை செய்து வருகிறோம். முக்கிய நகரங்களுக்கு குறுக்குச்சாலைகள் அமைக்கவும் நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஆய்வு கூட்டத்துக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர்கள் ஆர்த்தி, ஏ.ஆர்.ராகுல்நாத், ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், க.செல்வம், 3 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், கீதா, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஆர்.விஸ்வநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story