நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு திடீரென்று அமர்ந்து போராட்டம்


நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு திடீரென்று அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2021 11:25 AM GMT (Updated: 16 July 2021 11:25 AM GMT)

நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு ஆசாமி ஒருவர் திடீரென்று அமர்ந்து போராட்டம் நடத்தியதால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தினமும் பலர் வந்து செல்கின்றனர். இதனால் தலைமைச்செயலக வளாகம் எப்போதுமே பரபரப்புடன் காணப்படும்.

முதல்-அமைச்சரை சந்தித்துவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க விரும்புவோர், 10-ம் எண் நுழைவு வாயில் பக்கத்தில், முதல்-அமைச்சரின் கார் நிறுத்தப்பட்டுள்ள ‘போர்ட்டிகோ’விற்கு எதிரே உள்ள இடத்தில் வந்து பேட்டி கொடுத்துவிட்டுச்செல்வது வழக்கம். எனவே அந்த பகுதியில் போலீசாரின் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.

கார் முன்பு அமர்ந்தார்

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சிலர் சந்தித்துவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க 10-ம் எண் நுழைவு வாயில் அருகே வந்தனர். அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பெரியார்நகரைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரும் அந்த பகுதிக்கு வந்துவிட்டார். ஜாக்டோ ஜியோவைச் சேர்ந்தவர் என்று நினைத்து போலீசாரும் அருள்தாசை அந்த பகுதிக்கு செல்ல அனுமதித்துவிட்டனர்.

இந்த நிலையில் திடீரென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த முதல்-அமைச்சரின் கார் முன்பு அருள்தாஸ் அமர்ந்துவிட்டார். தனது நிலப்பிரச்சினையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டார். போலீசார் உடனே அங்கு சென்று அவரை அப்புறப்படுத்தினர். அவரை கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அனுப்பி விட்டனர்

அருள்தாசுக்கு நந்திவரம் கிராமம் நெல்லிக்குப்பம் சாலையில் 305 சதுர அடி மனை உள்ளதாகவும், அந்த மனையை அருகில் உள்ள ராதாநகர் பகுதியில் உள்ள சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு சர்வேயர் ஒருவர் அளந்தார் என்றும் அருள்தாஸ் கூறியுள்ளார்.

மேலும், அந்த மனை 132 சதுர அடி மட்டும்தான் உள்ளது என்று சர்வேயர் குறைத்து கூறியதாகவும், எனவே ராதாநகர் பகுதியை சேர்ந்த சிலர் தனது கடை சுவற்றை இடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனது மனையை அளந்து தரும்படி முதல்-அமைச்சர் தனிப் பிரிவில் மனு கொடுத்திருப்பதாகவும், அதில் விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சரின் கார் முன்பு அமர்ந்ததாகவும் போலீசாரிடம் அருள்தாஸ் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தினால் தலைமைச்செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story