மனைவி, குழந்தையை பரிதவிக்க விட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது 36 வருடங்களுக்கு பிறகு போலீசார் வழக்கு


மனைவி, குழந்தையை பரிதவிக்க விட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது 36 வருடங்களுக்கு பிறகு போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 17 July 2021 10:44 PM GMT (Updated: 17 July 2021 10:44 PM GMT)

மனைவி, குழந்தையை பரிதவிக்க விட்ட ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது 36 வருடங்களுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை கொளத்தூர் முருகன் நகரைச் சேர்ந்தவர் இளவரசி (வயது 65). இவர், 1975-ம் ஆண்டு தனது 19-வது வயதில் விஜய கோபாலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7 மாதம் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அப்போது இளவரசி கர்ப்பமானார்.

அதன்பிறகு வேலை விஷயமாக ஐதராபாத்துக்கு சென்ற விஜய கோபாலன் பின்னர் மாயமாகிவிட்டார். இதற்கிடையில் இளவரசிக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியாமல் 10 வருடங்களாக தனது மகளுடன், இளவரசி தனியாக பரிதவித்து வந்தார்.

1985-ம் ஆண்டு தனது கணவர் விஜயகோபாலன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன், போலீஸ் துறையில் பணி செய்து வருவதையும் இளவரசி அறிந்து கொண்டார். தன்னை, குழந்தையுடன் பரிதவிக்கவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி 1985-ம் ஆண்டு செம்பியம் போலீசில் இளவரசி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விஜயகோபாலனிடம் விசாரித்தனர். அதற்கு அவர், இளவரசி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பற்றி தனக்கு தெரியாது என மறுத்துவிட்டார். அதன்பிறகு 2010-ம் ஆண்டு இது தொடர்பாக கோர்ட்டில் இளவரசி வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இளவரசிக்கு விஜயகோபாலன் மூலம் பெண் குழந்தை பிறந்தது 2020-ம் ஆண்டில் உறுதியானது.

இந்தநிலையில் இளவரசி, இது தொடர்பாக தலைமைச்செயலக காலனி அனைத்து மகளிர் போலீசில் மீண்டும் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், மனைவி, குழந்தையை பரிதவிக்க விட்ட விஜயகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விஜயகோபாலன் கடைசியாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார். தற்போது அவருக்கு 72 வயதாகிறது.

சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தனது மகளுடன் பரிதவித்து வந்த இளவரசி, சுமார் 36 வருட சட்டப்போராட்டத்துக்கு பிறகு விஜயகோபாலன்தான் தனது கணவர் எனவும், அவர் மூலம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதையும் நிரூபித்து, தன்னை ஏமாற்றிய ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான தனது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story