தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 21 July 2021 12:18 AM GMT (Updated: 21 July 2021 12:18 AM GMT)

தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.12.02 கோடி மதிப்பீட்டில் 292 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி, ஊராட்சி திட்டப்பணிகள் மற்றும் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து துறையினரும் இணைந்து எடுத்து கொண்ட முழு முயற்சியின் காரணமாகத்தான் இன்றைக்கு கொரோனா தொற்று எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குன்றத்தூர் ஒன்றியம்

முன்னதாக அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த கரசங்கால் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் செயல்பாடுகள் மற்றும் குப்பை தரம் பிரித்தல் கூடம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கரசங்கால் பகுதியை சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவர் தனது நடக்க முடியாத 2 பிள்ளைகளை சக்கர நாற்காலிகளில் அழைத்து வந்து அமைச்சர்களை சந்தித்து எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இருவர் நடக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருப்பதாகவும் உதவி கேட்டு அமைச்சர்களிடம் மனு அளித்தார்.

ஏற்கனவே இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கலீல் ரஹ்மான் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கரசங்கால் பெரியார் சமத்துவபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து செரப்பனஞ்சேரி ஊராட்சியில் ஆரம்பாக்கம் கிராமத்தில் சகாயமாதா நகரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தனர்.

வாலாஜாபாத்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து தோட்டம் அமைத்து பல்வேறு கீரை வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மகளிர் சுய உதவிக்குழுவினர் பயிரிடும் கீரை தோட்டம் குறித்து அறிந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஊத்துக்காடு கிராமத்துக்கு நேரில் சென்று கீரை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மகளிர் சுய உதவி குழுக்கள் பயிரிடும் கீரை வகைகள் குறித்து கேட்டறிந்தார்.

கீரை தோட்டத்திற்கு வருகை தந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கீரைகட்டிலேயே பூச்செண்டு தயாரித்து வழங்கி வரவேற்றார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் பிரவீண் பி. நாயர், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வபெருந்தகை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீனிவாச ராவ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story