ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள்; ஊசி போடுவதை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள்; ஊசி போடுவதை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 21 July 2021 9:42 PM GMT (Updated: 21 July 2021 9:42 PM GMT)

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர். எனவே ஊசி போடுவதை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர். எனவே ஊசி போடுவதை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-வது அலை ஈரோட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிகிறார்கள். எனவே தடுப்பூசிக்காக பொதுமக்கள் முந்தையநாள் இரவில் இருந்தே திரண்டு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
வாக்குவாதம்
இந்தநிலையில் நேற்று தடுப்பூசி போடுவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் நள்ளிரவில் இருந்தே திரண்டனர். தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு உள்ளன. அந்த வட்டங்களில் கற்கள், பொருட்களை வைத்து பொதுமக்கள் இடம் பிடித்தனர்.
ஈரோடு நாடார்மேடு பகுதியில் ஒருவர் வைத்த கற்களை அகற்றிவிட்டு மற்றொருவர் இடம் பிடித்ததால், அங்கு சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் தடுப்பூசி போடப்படும் பல இடங்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் விடிய, விடிய காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 107 இடங்களில் தலா 100 பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு மையங்களிலும் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால், அந்த எண்ணிக்கைக்கு மேல் காத்திருந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பல நாட்களாக காத்திருந்தவர்களும் இருக்கிறார்கள்.
முறைப்படுத்த கோரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஏராளமானவர்கள் திரண்டு வருவதால், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. கடந்த சில நாட்களாக தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு கட்டணம் அதிகமாக உள்ளதால், பெரும்பாலானவர்கள் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் விடிய, விடிய காத்திருப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டோக்கன் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் பின் தேதியிட்டு டோக்கன் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி இருப்பு இல்லாமல் இருந்தால், பொதுமக்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு தடுப்பூசி வந்தவுடன் அழைக்கலாம். எனவே பொதுமக்கள் இரவு முழுவதும் காத்திருப்பதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story