காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை


காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2021 3:48 PM GMT (Updated: 22 July 2021 3:48 PM GMT)

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காமணம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டைமந்தையை சேர்ந்த அருள்ரோஸ்லின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. பிரபாகரன் காதல் திருமணம் செய்து கொண்டது, அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 


இதேபோல் பிரபாகரனுக்கும், அருள்ரோஸ்லினுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

அதன்பிறகு அருள்ரோஸ்லின், தனது குழந்தையுடன் ஒரு அறையில் தூங்க சென்று விட்டார். மற்றொரு அறையில் பிரபாகரன் தூங்க சென்றார். இந்தநிலையில் குடும்ப தகராறில் மனம் உடைந்த பிரபாகரன், அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


காலையில் எழுந்த அருள்ரோஸ்லின், தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story