சென்னிமலை அருகே பழுதடைந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் பாலம்; புதிதாக கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சென்னிமலை அருகே பழுதடைந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் பாலம்; புதிதாக கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 July 2021 8:51 PM GMT (Updated: 22 July 2021 8:51 PM GMT)

சென்னிமலை அருகே பழுதடைந்த நிலையில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலம் புதிதாக கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னிமலை
சென்னிமலை அருகே பழுதடைந்த நிலையில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலம் புதிதாக கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 
கீழ்பவானி வாய்க்கால்
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மண்ணாங்காடு. இங்கு கீழ்பவானி வாய்க்கால் பாலம் உள்ளது. சுமார் 65 வருடங்களுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த பாலத்தை கடந்து தினமும் கரும்பு லாரிகள், குச்சிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் அரசு டவுன் பஸ்கள் சென்று வருகிறது.
பாலத்தின் நடுப்பகுதியிலும் ஆங்காங்கே பள்ளம் போல் காணப்படுகிறது. மேலும் பாலத்தின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் தினமும் இந்த வழியாக பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயந்து செல்கின்றனர்.
அந்தரத்தில் பாலங்கள்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் சென்னிமலை பகுதியில் உள்ள பாலங்கள் மட்டுமல்ல. கீழ்பவானி வாய்க்கால் செல்லும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல பாலங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த பாலங்களின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் பாலங்கள் தொங்குவது போல் காணப்படுகிறது. இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலை பராமரிப்பு செய்வதற்காக தமிழக அரசு ரூ.709 கோடியே 60 லட்சம் நிதியை ஒதுக்கி பணிகளை தொடங்கியிருந்தது.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் பழுதடைந்த பாலங்கள் கட்டும் பணி நடைபெறாமல் இருந்து வருகிறது. 
அதிக நிதி ஒதுக்கீடு
பராமரிப்பு திட்டத்திற்காக தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்த ஒரே திட்டம் கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு திட்டம் மட்டும்தான்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே பழுதடைந்த பாலங்கள், மதகுகள், கிளை வாய்க்கால்கள் என அனைத்தையும் பராமரிக்க முடியும் என்பதால் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்" என்றனர்.

Next Story