3 மாதங்களுக்கு பிறகு சீனாபுரம் சந்தை கூடியது ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


3 மாதங்களுக்கு பிறகு சீனாபுரம் சந்தை கூடியது ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 23 July 2021 9:14 PM GMT (Updated: 23 July 2021 9:14 PM GMT)

3 மாதங்களுக்கு பிறகு கூடிய சீனாபுரம் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

பெருந்துறை
3 மாதங்களுக்கு பிறகு கூடிய சீனாபுரம் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது. 
மாட்டுச்சந்தை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக சந்தை மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சந்தை நேற்று மீண்டும் கூடியது.
இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 50-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம், சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 25-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. 
ரூ.60 லட்சத்துக்கு...
சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்றது.
சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விற்றது. மொத்தம் ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்றதாக சந்தை நிர்வாகிகள் கூறினர்.
திருப்பூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், திங்களூர், விஜயமங்கலம், காஞ்சிக்கோவில், அவல்பூந்துறை, அறச்சலூர், சென்னிமலை, நசியனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.
மேலும், நேற்றுக்கூடிய சந்தையில் முதல் முறையாக ஒரு காங்கேயம் இன பசுவும், அதன் காளை கன்று ஒன்றும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story