பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
x
தினத்தந்தி 24 July 2021 8:52 PM GMT (Updated: 24 July 2021 8:52 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளதால், பவானி ஆற்றில் எந்த நேரத்தில் உபரிநீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளதால், பவானி ஆற்றில் எந்த நேரத்தில் உபரிநீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
100 அடியை எட்டுகிறது
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறப்பதாலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,442 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 99.46 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என்றும் பின்னர் பவானி ஆற்றில் உபரி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரையோர மக்கள் வெளியேற்றம்
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டவுடன் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரை பவானி ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் தண்டோரா போடப்பட்டது. இதன்படி தற்போது பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட்டார்கள் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பவானிசாகர் அணையிலிருந்து பொதுப்பணித் துறை மூலமாக இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிங்கார வடிவேலன் தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
கோபி பகுதியில்....
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் எந்த நேரமும் தண்ணீர் திறந்து விடும் சூழ்நிலை ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி கோபி அருகே உள்ள மேவானி, சவுண்டப்பூர் கிராமங்களில் பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஊர் பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story