பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு


பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 26 July 2021 10:41 PM GMT (Updated: 26 July 2021 10:41 PM GMT)

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

பவானிசாகர்
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். 
ஆடு மேய்க்கும் தொழிலாளி
பவானிசாகர் அருகே உள்ள அய்யம்பாளையம் முண்டன்கரையை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், சீனிவாசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
வெங்கடேசும், செல்வியும் அந்த பகுதியில் ஆடு மேய்த்துவிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அருகே உள்ள பட்டியில் ஆட்டை அடைத்தனர். அதன்பின்னர் வெங்கடேஷ் தனது மனைவியை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு, பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். ஆனால் இரவு முழுவதும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதனால் உறவினர்கள் நேற்று காலை அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். உடனே இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடேஷ் தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை தண்ணீரில் போட்டார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story