காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை
x
தினத்தந்தி 27 July 2021 6:04 AM GMT (Updated: 27 July 2021 6:04 AM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலங்கள் சென்னையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று மீட்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமாக சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியின் அருகில் உள்ள 33 கிரவுண்ட் விலை மதிப்புமிக்க இடம் தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டு, தற்போது கோவில் பெயரில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நேற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி வணிக வளாகத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.

ரூ.5 கோடி மதிப்பு

இந்த இடங்களை கோவிலின் எவ்வித அனுமதியின்றி ஸ்ரீகண்டன் என்பவர் 1,399 சதுரஅடி, சூரியநாராயணன் 112 சதுர அடி, பி.டி.அபுபக்கர் 459 சதுர அடி உட்பட ஆக மொத்தம் 1,970 சதுர அடி இடத்தை வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை எடுத்து கோவில் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவில் வசம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், தயாகம் கவி, காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் பெ.ஜெயராமன், சென்னை மண்டல உதவி கமிஷனர் கவேனிதா, காஞ்சீபுரம் மண்டல உதவி கமிஷனர் ஜெயா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story