நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது


நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 27 July 2021 10:35 PM GMT (Updated: 27 July 2021 10:37 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

பவானிசாகர்,

பவானிசாகர் அணை முழு கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. எனவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

நீர்வரத்து குறைந்தது

கடந்த 25-ந் தேதி மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் உபரிநீா் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 931 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 844 கனஅடி உபரிநீராக திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 1,981 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தினால் நீர்வரத்து குறைந்தது. இதனால் பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் வினாடிக்கு 1,860 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story