கொடுமுடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவர் கைது- ஜெயிலில் இருந்து வெளிவந்த மறுநாளே கைவரிசை


கொடுமுடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவர் கைது- ஜெயிலில் இருந்து வெளிவந்த மறுநாளே கைவரிசை
x
தினத்தந்தி 27 July 2021 10:39 PM GMT (Updated: 27 July 2021 10:39 PM GMT)

கொடுமுடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜெயிலில் இருந்து வெளிவந்த மறுநாளே கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்.

கொடுமுடி
கொடுமுடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜெயிலில் இருந்து வெளிவந்த மறுநாளே கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்.
நகை பறிப்பு
கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட வருந்தியாபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 58). இவர் கடந்த 25-ந் தேதி மாலையில் அந்த பகுதியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். விஜயலட்சுமி நகையை இறுக்கமாக பிடித்து கொண்டதுடன், “திருடன்... திருடன்...” என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த நபர் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
கைது
இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில் தன்னாசியப்பன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகநாதன் (37) என்பதும், அவர்தான் விஜயலட்சுமியிடம் இருந்து நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. அதன்பிறகு ஜெகநாதனை போலீசார் கைது செய்து, நகையை மீட்டார்கள். 
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கரூர் டவுன் பகுதியில் நகை பறித்த வழக்கில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 24-ந் தேதி விடுதலையாகி வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story