ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 9:21 PM GMT (Updated: 28 July 2021 9:21 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர்.
மீண்டும் அதிகரிப்பு
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிரிழப்புகள் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் அதிக தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. அதன்பிறகு கொரோனா பரவல் மெதுவாக குறைய தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. கடந்த 24-ந் தேதி 132 பேருக்கும், 25-ந் தேதி 130 பேருக்கும், 26-ந் தேதி 127 பேருக்கும் தொற்று பாதிப்பு காணப்பட்டது.
நேற்று முன்தினம் திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. புதிதாக 132 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 140 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 93 ஆயிரத்து 207 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 91 ஆயிரத்து 224 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 186 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,351 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 88 வயது முதியவர் கடந்த 20-ந் தேதியும், 43 வயது ஆண் 26-ந் தேதியும் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 632 ஆக உயர்ந்தது.

Next Story