மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து


மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து
x
தினத்தந்தி 29 July 2021 3:14 AM GMT (Updated: 29 July 2021 3:14 AM GMT)

மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சுப்பராயலு (வயது 60). நேற்று இரவு 9 மணியளவில் இவரது ஓட்டல் பெயர் பலகையில் இருந்த மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது.

அப்போது வெளியில் வைக்கப்பட்டு உள்ள சிலிண்டரில் இருந்து ஓட்டலுக்குள் கியாஸ் கொண்டு செல்லப்படும் குழாயில் மின்வயர் விழுந்ததால் கியாஸ் தீப்பிடித்து குழாய் வழியாக ஓட்டலுக்குள் தீ பரவி ஓட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்களும், சாப்பிட வந்தவர்களும் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் ஓட்டல் முற்றிலும் எரிந்து நாசமானது. இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story