அரும்பாக்கம் கூவம் நதிக்கரையோரம் குடியிருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது


அரும்பாக்கம் கூவம் நதிக்கரையோரம் குடியிருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது
x
தினத்தந்தி 2 Aug 2021 12:11 PM GMT (Updated: 2 Aug 2021 12:11 PM GMT)

அரும்பாக்கம் கூவம் நதிக்கரையோரம் குடியிருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது மாநகராட்சி அறிவுறுத்தல்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை திட்டத்தின் கீழ் கூவம் நதியோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வரும் குடும்பங்கள் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு பகுதியாக அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நவீன வீடுகள் ஒதுப்பட்டு மறுகுடியமர்த்தபட்டுள்ளனர்.

மேலும் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story