ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை


ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை
x
தினத்தந்தி 5 Aug 2021 8:12 PM GMT (Updated: 5 Aug 2021 8:12 PM GMT)

மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தேசிய பாதுகாப்பு படை

தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட சில கோவில்களு்க்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 2 தினங்களாக தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

ஒத்திகை

இந்தநிலையில், நேற்று மதியம் மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள திடலில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய பகுதிகளில் திடீர் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடித்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகையை செய்துகாட்டினர்.
100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர். இதனால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விமான நிலையம்
இதனை தொடர்ந்து நேற்று இரவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மதுரை விமான நிலையத்தில் இக்குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Next Story