முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தை முதலீட்டு பத்திர தொகைபெற விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்; 31-ந் தேதி கடைசிநாள்


முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தை முதலீட்டு பத்திர தொகைபெற விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்; 31-ந் தேதி கடைசிநாள்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:17 PM GMT (Updated: 12 Aug 2021 10:17 PM GMT)

முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரங்களுக்கான தொகை பெறாமல் விடுபட்டவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

ஈரோடு
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரங்களுக்கான தொகை பெறாமல் விடுபட்டவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். 
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 1992-1993 நிதி ஆண்டு முதல் 2000-2001 நிதி ஆண்டுவரை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்தின் மூலம் முதலீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. 2 பெண்குழந்தைகள் உள்ளவர்களுக்கு தலா ரூ.1,500, ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என முதலீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2001-ம் ஆண்டு முதல் முதலீட்டு பத்திரங்கள் அனைத்தும் 2 பெண் குழந்தை உள்ளவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரத்து 200 மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகவும், ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 200 மற்றும் ரூ.50 ஆயிரமும் ஆகவும் வழங்கப்பட்டன.
விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
தற்போது அந்த தொகையினை பலரும் பெற்றுக்கொண்ட நிலையில் விடுபட்டவர்கள் தொகையினை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே முதலீட்டு பத்திரத்துக்கான தொகையை பெறாதவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டு பத்திரத்துக்கான தொகை பெறும் பயனாளி 10-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். முதலீட்டு பத்திரத்தின் அசல் அல்லது நகல், மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, புகைப்படம், தாயாரின் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடம் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 31-8-2021 க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Next Story