ஈரோட்டில் முக்கிய வீதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைப்பு


ஈரோட்டில் முக்கிய வீதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 10:17 PM GMT (Updated: 12 Aug 2021 10:17 PM GMT)

ஈரோடு முக்கிய வீதிகளில் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படுகிறது.

ஈரோடு
ஈரோடு முக்கிய வீதிகளில் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படுகிறது.
கடைகள் அடைப்பு
கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 9-ந் தேதி முதல் பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் மாலை 5 மணியுடன் அடைக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி. பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி  ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடிதுறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம் நிர்மலா தியேட்டர் ஜங்சன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்வேஸ்வரா பஸ் நிலையம், டி.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
சீல் வைப்பு
இந்த கட்டுப்பாடுகள் 2 வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 23-ந் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும். இந்த கட்டுப்பாடுகளை மீறி அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதேபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி கடைகள் திறக்கப்பட்டால், சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
வழிபாட்டு தலங்கள்
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கோவில்களில் ஆகம விதிபடி வழக்கம்போல் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் மட்டும் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story