திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 10:17 PM GMT (Updated: 13 Aug 2021 10:17 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
 சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்வதற்கும், அங்கிருந்து தமிழ்நாடு வருவதற்கும் திம்பம் மலைப்பாதை முக்கிய ரோடாக உள்ளது. 
அதனால் இந்த ரோடு வழியாக கார், லாரி, பஸ், வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் தான் வளைவுகளை திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. அதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். 
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் நேற்று காலை கோவையிலிருந்து பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. காலை 9 மணி அளவில் 4-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி பழுதாகி நின்றுவிட்டது. 
அப்போது அந்த வழியாக சிமெண்டு ஏற்றி வந்த லாரி ஒன்று எஞ்சியிருந்த சிறிய வழியில் செல்ல முயன்று நின்றுவிட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் மெக்கானிக்கை வரவழைத்து, பழுது நீக்கி பருப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து மற்ற வாகனங்கள் சென்று வந்தன. 



Next Story