கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 9:26 PM GMT (Updated: 14 Aug 2021 9:26 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
24 பகுதிகள்
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் சந்திப்பு, புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் உள்பட 24 பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகள்
ஈரோடு மாநகர் பொருத்தவரை ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் ரோட்டின் இருபுறங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. மேலும் இங்கு ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்த பகுதிகளில் நேற்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதைப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் நேற்று மூடப்பட்டிருந்தது. இந்த பகுதியில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மாநகராட்சி அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணித்தனர். மேலும் மேற்கண்ட 24 இடங்களில் செயல்படும் 12 டாஸ்மாக் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story