செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2021 6:10 AM GMT (Updated: 16 Aug 2021 6:10 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருடன்் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அதனை தொடர்ந்து மொத்தம் 313 பயனாளிகளுக்கு ரூ.58,77,900 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல் ராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், சுகாதார துறை துணை இயக்குனர் பிரியாராஜ், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள் சாகிதா பர்வின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சூர்

இதுபோல செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் பள்ளியின் நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் மாவட்ட நீதிபதி வசந்த லீலா, செங்கல்பட்டு நகராட்சி அலுவலத்தில் ஆணையர் ராஜலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட சிறைச்சாலையில் துணை சூப்பிரண்டு இசக்கிமுத்து, ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 சைக்கிளில் பா.ஜ.க. இளைஞரணியினர் பங்கேற்ற சைக்கிள் பேரணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் தொடங்கி கோவளம், நெம்மேலி வழியாக மாமல்லபுரத்தில் நிறைவடைந்தது.

மாமல்லபுரம் மகிஷாசூரமர்த்தினி குடைசிற்பம் அருகில் மாவட்ட தலைவர் சுதீஷ்சங்கர், மாமல்லபுரம் நகர பா.ஜ.க. தலைவர் தணிகைமணி முன்னிலையில், பா.ஜ.க. மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் முடித்து வைத்தார். அங்கு பா.ஜ.க. இளைஞரணியினர் அனைவரும் மோடி அரசின் சாதனைகளை கூறி சுதந்திர தின உறுதிமொழி ஏற்றனர்.

மண்ணிவாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காட்டாங்கொளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல வண்டலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற செயலர் வீரராகவன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை, கார்த்திகேயன், விவேகானந்தன், சுப்பிரமணியன், நகர செயலாளர் ரவி, பேரூர் செயலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதேபோல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

அச்சரப்பாக்கம்

அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் எழிலரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வீரமுத்து உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story