கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை கடந்த பவானிசாகர் அணை


கட்டி முடிக்கப்பட்டு  66 ஆண்டுகளை கடந்த பவானிசாகர் அணை
x
தினத்தந்தி 18 Aug 2021 5:52 PM GMT (Updated: 18 Aug 2021 5:52 PM GMT)

கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை பவானிசாகர் அணை கடந்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை பவானிசாகர் அணை கடந்துள்ளது. 
பவானிசாகர் அணை
இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும் மோயாறும் கலக்குமிடத்தில் ரூ.10½ கோடி செலவில் பவானிசாகர் அணை கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப்பணி 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய சென்னை மாகாண முதல்-அமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பவானி ஆற்றுப்பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 
மின்சார உற்பத்தி
32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த அணையின் கரையின் நீளம் சுமார் 8.78 கிலோ மீட்டராகும். அணையின் மொத்த உயரம் 105 அடியாக உள்ளது.  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண்அணை என்ற பெருமையையும் இந்த அணை பெற்றுள்ளது.  கீழ்பவானி பிரதானக்கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டராகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளைவாய்க்கால்களும், 1900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. அணையில் ஆற்று மதகுகள் 9-ம், கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3-ம், நீர் வழிந்தோடி மதகுகள் 9 என மொத்தம் 19 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
உறுதி தன்மை
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953-ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்-அமைச்சர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950-களிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள எந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தி உள்ளனர். இதற்கு தேவையான எந்திரங்கள் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என அணைகட்டுமானப்பணிக்கு சென்ற இப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனர். 
முற்றிலும் மண்ணால் கட்டப்பட்ட இந்த அணை 66 ஆண்டுகளைக்கடந்தும் சிறிதுகூட விரிசல் ஏற்படாமல் உறுதித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் தரிசுநிலங்கள் நன்செய் நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தின் உயிர் நாடியான இந்த அணை இன்று 67-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. இன்னும் பல நூறாண்டுகள் இந்த அணையை பாதுகாப்பது அரசின் கடமை.

Next Story