பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 5:09 PM GMT (Updated: 20 Aug 2021 5:09 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,536 கன அடி நீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 100.88 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 822 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 100.05 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பெருந்துறை அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு ஏற்பட்டதால் தற்போது திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

Next Story