ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 26 Aug 2021 5:22 PM GMT (Updated: 26 Aug 2021 5:22 PM GMT)

வால்பாறை அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கதவு, ஜன்னல் களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

வால்பாறை

வால்பாறை அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கதவு, ஜன்னல் களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. 

காட்டு யானைகள் முகாம் 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இங்கு முகாமிட்டு, அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட் அருகே உள்ள வனப்பகுதியில் 8 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள்  இரவில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தன.

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அட்டகாசம் 

பின்னர் அவைகள், சேக்கல்முடி எஸ்டேட்டில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பிரிவுக்கு சென்று கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

தொடர்ந்து துதிக்கையை ஜன்னல் வழியாக உள்ளே விட்டு அறைக்குள் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப் படுத்தின. அந்த நேரத்தில் அங்கு நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 

கதவு, ஜன்னல்களை உடைத்தது 

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகளை துரத்தினார்கள். அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் டாக்டர் வீட்டு கதவு, ஜன்னலையும் உடைத்ததுடன், அங்கு நிறுத்தி இருந்த காரையும் சேதப்படுத்திவிட்டு சென்றன. 

பின்னர் அதிகாலையில் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள், எஸ்டேட் மேலாளர் வீடு, தொழிற்சாலை அதிகாரி, தோட்ட அதிகாரி வீடுகளின் கதவு, ஜன்னல்களையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தின. 

வனத்துறையினர் கண்காணிப்பு 

இது குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அதிகாரி மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அந்த யானைகளை துரத்தினார்கள். தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

காட்டு யானைகள் முருகாளி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story