6 கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


6 கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2021 2:51 AM IST (Updated: 28 Aug 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

செக்கானூரணியில் அறநிலையத்துறை கைப்பற்றிய கோவிலை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செக்கானூரணி,
செக்கானூரணியில் அறநிலையத்துறை கைப்பற்றிய கோவிலை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

1,500 ஆண்டு பழமை வாய்ந்தது

செக்கானூரணியில் 1,500 ஆண்டு பழமை வாய்ந்த பேக்காமன் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆ.கொக்குளம், கே.பாறைப்பட்டி, ஒத்தபட்டி, சிக்கம்பட்டி, தேன்கல்பட்டி, அய்யம்பட்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் திருவிழா 20 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
விழா காலங்களில் கிராம பொறுப்பாளர்கள் கோவிலை நிர்வகித்து வந்தனர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அந்த கோவில் இருந்து வந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவிலை விடுவிக்க கோரி 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திரண்டு மதுரை-உசிலம்பட்டி சாலையில் உள்ள செக்கானூரணி பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்தனர். பொதுமக்கள் திரண்டு வந்ததை அறிந்த செக்கானூரணி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு போலீசாரை கேட்டு கொண்டனர். அதன்அடிப்படையில் போலீசார் அவர்களுக்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கினர்.இதையடுத்து தேவர் சிலை அருகே திரண்ட 6 கிராம மக்களும் அறநிலையத்துறை கண்டித்து கோஷம் எழுப்பி பேக்காமன் கருப்பசாமி கோவிலை மீண்டும் ஊர் மக்களிடம் ஒப்படைக்க கோரி கோஷமிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story