பெரம்பூரில் ரூ.1¼ கோடி வரி செலுத்தாத வணிக வளாகத்துக்கு‘சீல்’; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பெரம்பூரில் ரூ.1¼ கோடி வரி செலுத்தாத வணிக வளாகத்துக்கு‘சீல்’; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2021 9:16 AM GMT (Updated: 28 Aug 2021 9:16 AM GMT)

சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியில் திரையரங்குகளுடன் கூடிய பிரமாண்ட வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்திற்குள் 5 திரையரங்கம் உள்பட30-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், வளாகத்தில் உள்ள 5 திரையரங்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் அமைத்துள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் பாக்கியாக ரூ.1 கோடியே 23 லட்சத்தை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி செலுத்தாமல் இழுத்தடித்து வந்ததாகவும், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் 6-வது மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையில் வருவாய் அதிகாரி லட்சுமணகுமார், ஆய்வாளர் யுவராஜ் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று வணிக வளாகத்தை மூடி சீல் வைத்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர், செலுத்த வேண்டிய பாக்கி வரிக்கான அறிவிப்பு பேனரை வணிக வளாகத்தின் முன்பு தொங்கவிட்டு சென்றனர். இந்த வணிக வளாகம் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மூடப்பட்டுள்ளது.

Next Story