ஒப்பந்தகாரரின் அஜாக்கிரதையால் மேம்பாலத்தில் விபத்து நடந்துள்ளது-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


ஒப்பந்தகாரரின் அஜாக்கிரதையால் மேம்பாலத்தில் விபத்து நடந்துள்ளது-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2021 8:03 PM GMT (Updated: 29 Aug 2021 8:03 PM GMT)

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தகாரரின் அஜாக்கிரதையால் விபத்து நடந்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை,
மதுரை-நத்தம் மேம்பாலத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தகாரரின் அஜாக்கிரதையால் விபத்து நடந்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

உயர்மட்ட மேம்பாலம்

மதுரை-நத்தம் நான்குவழிச்சாலை பணிக்காக மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.545 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தில் இருந்து மதுரை நகரை இணைப்பதற்காக இணைப்பு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதில் உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து நாகனாகுளம் பகுதியில் இறங்குவதற்கு கட்டப்பட்ட இணைப்பு பாலத்தில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டு உத்தரபிரதேச தொழிலாளி ஆகாஷ் சிங் (வயது 27) பலியானார்.
இந்த விபத்தையடுத்து மேம்பால பணிகளை நிறுத்துவதற்கு கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அஜாக்கிரதை

ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை-நத்தம் சாலையினை இணைக்கின்ற வகையில் 7.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. மும்பையை ேசர்ந்த ஜே.எம்.சி என்ற தனியார் நிறுவனம் இந்த பணியினை கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் இந்த பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் அணுகு சாலை பாலத்தில், ஒப்பந்தகாரரின் அஜாக்கிரதையால் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஹைட்ராலிக் ஜாக்கி

பாலத்தின் கர்டரை இணைக்கும் போது ஹைட்ராலிக் ஜாக்கி எந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 160 டன் எடையுள்ள கர்டரை தூக்கி நிறுத்த குறைந்தது 200 டன் ஹைட்ராலிக் ஜாக்கியை பயன்படுத்த வேண்டும். அதன்படி இங்குள்ள கர்டரை தூக்கி நிறுத்துவதற்கு எத்தனை டன் எடையுள்ள ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்பட்டது என்று விசாரிக்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த பாலம் கட்டும் பணியானது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிற பணியல்ல. முழுக்க, முழுக்க மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் நடைபெறும் பணியாகும். இந்த பணி நடைபெற்ற இடத்தில் பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய திருச்சி என்.ஐ.டி.யை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்யப்படும். விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னுரிமை

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடந்து வரும் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதில் விருதுநகர், சிவகங்கை மற்றும் திருச்சியில் நடந்த சாலை பணிகளில் தரம் இல்லாத காரணத்தால் ஒப்பந்தகாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தினை தடுக்க பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story