பறை அடித்து மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


பறை அடித்து மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 1 Sep 2021 5:23 PM GMT (Updated: 1 Sep 2021 5:23 PM GMT)

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பறை அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பறை அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து வருவோருக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் குறைந்து வருவதால், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்தன.  

பள்ளி க்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

உற்சாக வரவேற்பு

வகுப்பறையில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வைக்கப்பட்டனர். பாடங்களை நடத்து வதற்கு பதிலாக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். 

பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கபடுவதால் பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாழை மரங்கள் கட்டியும், பள்ளி வளாகத்தில் கோலமிட்டு திருவிழா போல் காட்சி அளித்தது. மேலும் சக மாணவ-மாணவிகள் பறை அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதை தொடர்ந்து மாணவர் களுக்கு பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகாரி ஆய்வு 

மேலும் காடம்பாறை, வெள்ளிமுடி உள்ளிட்ட பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி கண்ணுச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் பெற்றோரிடம் கடிதம் வாங்கி வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அதுபோன்று மதிய உணவை பகிர கூடாது, என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

ஆன்லைன் வகுப்புகள் 

தமிழக-கேரள எல்லையில் உள்ள பள்ளிகளில் கேரளாவில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து படிக்கின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அங்கு உள்ள மாணவ- மாணவிகளுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story