திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 1 Sep 2021 6:58 PM GMT (Updated: 1 Sep 2021 6:58 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், நேற்று திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், நேற்று திறக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்.

 பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 544 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 742 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் 131 பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 11 ஆயிரத்து 927 ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களில் 11 ஆயிரத்து 296 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 

தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களில் 146 பேர் சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள்.

 ஆர்வத்துடன் வந்த மாணவ- மாணவிகள்

அனைத்து பள்ளிகளிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பஸ்சில் வரும் மாணவர்களுக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 5 வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் ஆர்வமாக வந்தனர். 

பள்ளி மற்றும் கல்லூரி நுழைவு வாயிலில் அவர்களுக்கு உடல்வெப்பநிலை கண்டறியப்பட்டு, கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. 

மேலும் வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். 

முதல் நாளான நேற்று காலையில் மாணவர்களுக்கு முதலில் ஆசிரியர்கள் கொரோனா குறித்து விளக்கினர்.

 அங்கன்வாடி மையம்

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களுக்கு 1 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் தினசரி வருகின்றனர். 

அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் காலை 11.30  மணி முதல் 12.30 மணிக்குள் மதிய உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 205 பணியாளர்களில் 3 ஆயிரத்து 158 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 

நேற்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார். 

திருவண்ணாமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

 கலெக்டர் ஆய்வு

மேலும் திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு முககவசம் அணிய வேண்டும்.

மதிய உணவு சூடாக வழங்க வேண்டும் என்றார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலா் கந்தன், உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) கந்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story