கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி


கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
x
தினத்தந்தி 1 Sep 2021 8:44 PM GMT (Updated: 1 Sep 2021 8:44 PM GMT)

கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.

கடத்தூர்
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார். 
மோதல்
கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் மூர்த்தி. மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள்கள் சந்திரலேகா (வயது 17). ஷாத்திகா (5). 
இந்தநிலையில் சந்திரலேகாவும், ஷாத்திகாவும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தேவி (60) என்பவருடன் நேற்று முன்தினம் நாதிபாளையத்தில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு பயணிகள் ஆட்டோவில் சென்றார்கள். ஆட்டோவை தேவராஜன் என்பவர் ஓட்டினார். 
அப்போது கல்ராமணி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே ஒரு வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் சந்திரலேகா, ஷாத்திகா, தேவி, ஆட்டோ டிரைவர் தேவராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். 
சிறுமி சாவு
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் சந்திரலேகா, ஷாத்திகா இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சிறுமி ஷாத்திகா நேற்று இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story