நகைகள் கொள்ளை வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது


நகைகள் கொள்ளை வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 4:58 PM GMT (Updated: 2 Sep 2021 4:58 PM GMT)

நகைகள் கொள்ளை வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கார்த்திகா (வயது35). கடந்த 27-ந்தேதி கார்த்திகா தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது பட்டப்பகலில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், ரூ.8ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இ்துகுறித்து கார்த்திகா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடிவந்தனர். இந்்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பேட்டையை அடுத்த வட செறுபனையூர் காலனி தெருவை சேர்ந்த அன்பு (31), மணிகண்டன் (21), ஆரியலூர் கீழத்தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (22) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கார்த்திகா வீட்டில் திருடியதும், முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story