5 மாதங்களுக்கு பிறகு உற்சாகத்துடன் பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்


5 மாதங்களுக்கு பிறகு உற்சாகத்துடன் பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Sep 2021 5:04 PM GMT (Updated: 2 Sep 2021 5:04 PM GMT)

5 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். உடலும், உள்ளமும் லேசானதாக நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்,

கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று குறைந்து கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு உத்தரவில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி நேற்று முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை திறக்கப்பட்டன. இதையடுத்து ஆசிரியர்கள், 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 143 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், மெட்ரிக் உள்பட 58 தனியார் பள்ளிகளும், 19 அரசு உதவிபெறும் பள்ளிகளும் என மொத்தம் 220 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பள்ளி முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்

திருவாரூர் மாவட்டத்தில் 220 பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். இதனால் சாலைகளில் பள்ளி சீருடையுடன் புத்தகபைகளை சுமந்து சென்ற மாணவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு காண முடிந்தது. பள்ளி வாசலில் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தன. மேலும் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக முககவசம் கட்டாயம் என்பது கடைபிடிக்கப்பட்டது.

இதில் திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரஜினி தலைமையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். மேலும் கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமிநாசினி வழங்கினர். . இதையடுத்து வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சிற்கு 2 மாணவர்கள் என்ற விகிதத்தில் 20 மாணவர்கள் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். கொரோனா பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எடையூர் அரசு மேல்நிலைப்ள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்றுவருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உள்பட அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 80 சதவீதம் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கு சென்ற மாணவிகளிடம், உடல் வெப்பநிலை கருவிகள் மூலம் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கைகளில் தெளித்தல் போன்ற சுகாதார சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து வகுப்பறையில் படிக்க தொடங்கினார். இதேபோல் கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 சதவீதம் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

மன்னார்குடி, நீடாமங்கலம்

மன்னார்குடியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சானிடைசர் கொடுத்து அனுமதிக்கப்பட்டனர். கட்டாயமாக முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

நீடாமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் நண்பர்களை அடையாளம் கண்டு மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு கைசுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பள்ளிசுற்றுப்புற தூய்மை குறித்தும், கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் கல்விஅதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

குடவாசல்

குடவாசல் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு விதிமுறைகளின்படி முக கவசம் அணிந்து, கிருமி நாசினி கொண்டு கைகழுவி சமூக இடைவெளியுடன் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து வகுப்புகளை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினர்.

67 சதவீத மாணவர்கள் வருகை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 9-ம் வகுப்பில் 8 ஆயிரத்து 423 மாணவர்கள், 10-ம் வகுப்பில் 11 ஆயிரத்து 292 மாணவர்கள், 11-ம் வகுப்பில் 7 ஆயிரத்து 699 மாணவர்கள், 12-ம் வகுப்பில் 9 ஆயிரத்து 594 மாணவர்கள் என 37 ஆயிரத்து 8 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். 27 ஆயிரத்து 358 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் வருகை பதிவு 68.07 சதவீதமாகும்.

Next Story