6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 9:59 PM GMT (Updated: 2 Sep 2021 9:59 PM GMT)

மொடக்குறிச்சி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு
மொடக்குறிச்சி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 50). தறி பட்டறை தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். 
கடந்த 2018-ம் ஆண்டு சம்பவத்தன்று தங்கராசு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அவருடைய வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அந்த சிறுமியிடம் தங்கராசு நைசாக பேசி அருகில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர், அந்த சிறுமியிடம் இதுபற்றி வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
போக்சோவில் கைது
அதன் பின்னர் வீட்டுக்கு சென்று சிறுமி அழுது கொண்டு இருந்தார். இதைப்பார்த்த பெற்றோர் அவரிடம் கேட்டபோது, அவர் நடந்ததை கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள், தங்களுடைய குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
20 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ‘சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக தங்கராசுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.  மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்,’ எனவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Related Tags :
Next Story