ஒர்க் ஷாப் மேற்கூரையில் தலைகுப்புற பாய்ந்த கார்


ஒர்க் ஷாப் மேற்கூரையில் தலைகுப்புற பாய்ந்த கார்
x
தினத்தந்தி 3 Sep 2021 2:08 PM GMT (Updated: 3 Sep 2021 2:08 PM GMT)

ஒர்க் ஷாப் மேற்கூரையில் தலைகுப்புற பாய்ந்த கார்

கணபதி

ஒர்க் ஷாப் மேற்கூரையை உடைத்துக் கொண்டு கார் தலைகுப்புற பாய்ந்தது. இதில் அந்த காரை ஓட்டி சென்று வியாபாரி அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு

வியாபாரி

கோவையை அடுத்த கணபதி சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ரகுவரன் (வயது25) வியாபாரி. 

இவர், நேற்று காலை 7 மணியளவில் கணபதி நோக்கி சத்திரோட்டில் தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.
 அப்போது மழை பெய்ததால் சாலை முழுவதும் ஈரமாகவும் சேறும், சகதியுமாக இருந்துள்ளது.


அவர், கணபதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அருகே வந்தபோது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் ரோட்டை விட்டு இறங்கி அங்கிருந்த மரத்தில் மோதியது.

அதிர்ஷ்டவசமாக தப்பினார்

அதன்பிறகும் அந்த நிற்காமல் ரோட்டின் ஓரத்தில் சுமார் 6 அடி பள்ளத்தில் இருந்து ஒர்க் ஷாப்பின் மேற்கூரையின் மீது தலைகுப்புற கவிழ்ந்து மரத்தில் சிக்கியபடி செங்குத்தாக நின்றது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

ஆனால்ரகுவரன் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்டி உள்ளார். அதோடு காரில் இருந்து ஏர்பேக் விரிந்ததால் அவர் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

விபத்து நடந்த நேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

கார் கவிழ்ந்ததை அறிந்ததும் அங்கு பொது மக்கள் திரண்டனர். அவர்கள் காருக்குள் சிக்கிய ரகுவரை மீட்க முயன்றனர். ஆனால் காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடிய வில்லை.

விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மரக்கிளையில் தொங்கியது போல் நின்ற காரை கயிறு கட்டி கீழே இறக்கினர். 

பின்னர் காரில் இருந்த ரகுவரனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இ்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது. 

அதன் மீது கார் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட் டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒர்க் ஷாப் மேற்கூரையை உடைத்துக் கொண்டு கார் கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தியது.


Next Story