வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 3 Sep 2021 5:38 PM GMT (Updated: 3 Sep 2021 5:38 PM GMT)

வால்பாறையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டதையொட்டி அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

வால்பாறை

வால்பாறையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டதையொட்டி அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். 

சுற்றுலா மையங்கள் 

வால்பாறையில் 9-வது கொண்டை ஊசி வளைவு காட்சிமுனை, கூழாங்கல் ஆறு, கீழ் மற்றும் மேல் நீரார் அணை, சோலையாறு அணை ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன. இதுதவிர வனத் துறை கட்டுப்பாட்டில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பகுதிகள் உள்ளன. 

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா மையங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வால்பாறையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. 

சுற்றுலா பயணிகள் குவிந்தனர் 

இதைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார் கள். குறிப்பாக நல்லமுடி காட்சிமுனை பகுதியில் மேகங்கள் தவழ்ந்து பார்ப்பதற்கு அழகான சூழல் இருந்தது. அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். 

இங்கு லேசாக சாரல் மழை பெய்தாலும், இதமான காலநிலை நிலவி வருவதால், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

கடும் நடவடிக்கை 

வால்பாறையில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார் கள். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் இயல்புநிலை மீண்டும் திரும்பி வருகிறது. 

இது ஒருபுறம் இருக்க இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும் பாலானவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதற்காக கண்காணிப்பு குழு நியமித்து, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story