சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்-கலெக்டர் எச்சரிக்கை


சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது  குண்டர் சட்டம் பாயும்-கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2021 8:31 PM GMT (Updated: 3 Sep 2021 8:31 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:-

70 ஆலைகள் மூடல்

பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட 5 சிறப்பு குழுவானது திங்கள் முதல் சனி வரை ஆய்வு செய்யும் பொருட்டு கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரை உள்ள காலங்களில் 8 முறை நியமனம் செய்யப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 757 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
 அதிகப்படியான விதி மீறலில் ஈடுபட்ட 70 பட்டாசு ஆலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு செய்து விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 116 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 குற்ற வழக்குகள்
 சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்கள் சட்ட விரோதமாக பட்டாசுகள் பேக்கிங் செய்து கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட 70 தொழிற்சாலைகளில் விதி மீறல்களை சரிசெய்த 49 தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
 மேலும் சிறப்பு குழுவானது ஒவ்வொரு வாரமும் மாற்றியமைக்கப்பட்டு திங்கள் முதல் சனி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாக்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதோடு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

குண்டர் தடுப்பு சட்டம்

தொடர்ச்சியாக சட்டவிரோதமாக பட்டாசு செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்யப்படும்.
 மேலும் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி செய்யும் நபர்கள் மட்டும் விதிமுறைகள் மீறும் பட்டாசு ஆலைகள் குறித்து தனி தாசில்தாரிடம் (தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள்) புகார் தெரிவிக்கலாம்.
 இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story