கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்


கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:54 PM GMT (Updated: 3 Sep 2021 8:54 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு
கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்பதால் மாணவ -மாணவிகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகிறது. சில நிறுவனங்களில் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பணி வழங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சான்றிதழ்
இதன் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்வதை கூட நிறுத்தி விட்டு நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள். அப்போது அவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்களை அங்கு சமர்ப்பித்து வருகிறார்கள். எனினும் தடுப்பூசி போடும் அதிகாரிகள் சரிவர பதிவு செய்யாததால் அவர்களுக்கு சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
ஒரு சிலருக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் சான்றிதழ் கிடைக்காமல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். கல்லூரி மாணவ -மாணவிகளுக்கும் சான்றிதழ் கிடைக்காததால் அவர்கள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து யாரிடம் கேட்க வேண்டும் என்றுகூட அவர்கள் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அலைக்கழிப்பு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று அங்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டால் உடனடியாக பதிவு செய்து தருவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அதற்கு உரிய பதில் கொடுப்பதில்லை.
மேலும் அவர்கள் ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்களை வாங்கி கொண்டு பதிவு செய்து தருவதாகக் கூறி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அவர்களும் முறையாக பதிவு செய்வது கிடையாது. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story