மோட்டார் சைக்கிளில் சென்ற போது மினிலாரி மோதி 2 பேர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போது மினிலாரி மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Sep 2021 5:54 PM GMT (Updated: 5 Sep 2021 5:54 PM GMT)

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது மினி லாரி மோதி பலியானார்கள்.

போத்தனூர்

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது மினி லாரி மோதி பலியானார்கள். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தனியார் நிறுவன ஊழியர்கள் 

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அமல் ராதாகிருஷ்ணன் (வயது 25). இவருடைய நண்பர் அக் ஷய்குமார் (25). இவர்கள் 2 பேரும் லாரி நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். 

இவர்கள் அடிக்கடி கோவை வந்து வியாபாரிகளை சந்தித்து தங்களது நிறுவன லாரியில் லோடு ஏற்ற வாய்ப்பு தருமாறு கேட்பது வழக்கம். அதன்படி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கோவை வந்தனர். 

மினிலாரி மோதியது 

பின்னர் அவர்கள் வியாபாரிகளை சந்தித்து பேசிவிட்டு, பல்லடம் சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பாலக்காடு நோக்கி சென்றனர். 

அவர்கள் பல்லடம்-செட்டிப்பாளையம் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே முன்னால் ஒரு லாரியை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த மினிலாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

2 பேர் பலி 

இதில் அமல் ராதாகிருஷ்ணன், அக் ஷய்குமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story